பொதுவாகவே பெண் மனம் என்பது ஆணின் கண்கள் வழியாகவே காணக் கிடைக்கிறது. சிறிது காலமாகத்தான் இது பெண்கள் வழியாகவே வெளிப்படுகிறது. அதில் பெரும்பாலானவை பெண்ணியம் பேசுபவை. ஆம் அதுவும் பெண் தான். ஆனால் பெண்ணுக்குள் இருக்கும் ஆண்மையைப் பேசுபவை. இது அவளது மறுபக்கம். அவள் தனக்குத் தானேகூட ஏற்றுக்கொள்ளத் தயங்கும் மறுபக்கம். இது ஒவ்வொரு பெண்ணுள்ளும் எழும் பித்து. அவளது பிரேமை. ஒவ்வொருத்தியும் ஏதோ ஒரு கட்டத்தில் உணர்வது. பின்னாளில் அவள் குடும்பம், குழந்தைகள் என ஆகிவிடும்போது மறக்கப்பட்டு மறுக்கப்பட்டு விடுகிறது.
ஜெயமோகன் அவர்கள் நீலத்தில் விவரிக்கிறார். கண்ணனைக் குழந்தையாகக் கொஞ்சும் ராதை, அவன் பெண்கள் ஆடைகளைக் கவர்ந்து கொண்டபோது அவன் கண்களைச் சந்தித்துவிட அவள் உள்ளிருந்த பெண்மை விழித்துக் கொள்கிறது. இது அங்கே மட்டுமல்ல ஒவ்வொரு பெண்ணுள்ளிருந்தும் ராதை எழுகிறாள். கண்ணன் பார்க்கும் ஒரே பார்வையில் அவள் வெறும் பெண்ணாகி, பேதையாகி, பித்தாகி, பிச்சியாகிப் போகிறாள். அவன்மீது கொண்ட பிரேமை மட்டுமே அவள் என்றாகி விடுகிறது.
அன்று, இன்று என்றல்ல என்றுமே இதுதான் நடந்து வந்துள்ளது. கல்லாக இருக்கும் பெண்ணின் மனத்தைக் கனிய வைப்பவை அவன் கண்கள். தோழியென, அன்னையென பல்வேறு பாவனையில் அவனை சுற்றிவரும் பெண் அவன் காதலியெனவாகும் விந்தை. இது வேறொன்றுமல்ல அவன் அருகாமையை நாடும் பெண் போட்டுக்கொள்ளும் பாவனைகள். அவனை நெருங்கினால் தான் உருகிக் கரைந்து விடுவேனென்று தெரிந்ததால் போட்டுக்கொள்ளும் பாவனை. இவை அனைத்தும் அவன் ஒரே பார்வையில் கரைந்துவிடுகின்றன. வெறும் பிரேமை மட்டுமே அங்கே எஞ்சியிருக்கும். அதுவே ராதை. அதை உணர்ந்துகொள்ளும் பெண், அவன் காதலியாகி, பக்தையாகி விடுகிறாள். ஊரின் கட்டுக்கோப்புகள், அயலவரின் அலர் என எல்லாவற்றையும் தாண்டி, கண்ணனுக்காகவே தன்னை அர்ப்பணித்தும் விடுகிறாள்.
ஆனால் முதன் முதலில் அவள் தன்னை உணர்ந்து கொள்ளும்போது ஏற்படும் அந்த அதிர்ச்சியை அவளால் தாங்கிக் கொள்ளமுடியாமல் ஆகிவிடுகிறது. இருளுக்குள் தன்னைப் புதைத்துக் கொள்ள முயல்கிறாள். எல்லாம் தன் உண்மை முகத்தை ஏற்றுக் கொள்ள முடியாது, தன்னைத்தானே சந்திக்க அஞ்சி அவள்நடிக்கும் நாடகங்கள். அந்த ராதையோ அதை ஏற்றுக்கொள்ளவே முடியாது கண்ணனை நிரந்தரமாய் பிரிந்துவிடவே முடிவெடுக்கிறாள். திருமணத்திற்கு சம்மதம் சொல்கிறாள். ஏனெனில் அங்கே அவளது பெண்ணெனும் சிறு அகங்காரம் அடிபட்டுப் போகிறது. எந்தப் பெண்ணுள்ளும் உறையும் அகங்காரம் அது. கண்ணனின் பார்வை பட ஊருக்காக அது போட்டுக்கொண்ட பொறை, கற்பு என்று சொல்லப்படும் ஆடைகள் அகன்றுவிட வெறும் பெண்மை மட்டுமே அவன்முன் மண்டியிடுகிறது.
பெரும்பாலும் பின்னாளில் குடும்பம், கடமைகள் என பெண் தொலைந்து போய் விடுவதால், அவளது பிரேமை மறக்கப்பட்டு விடுவதுடன், அவளுள் வாழ்ந்த ராதையும் உள்ளே தூங்கிவிடுகிறாள், அல்லது தூங்கிவிட்டதாக பாவனை செய்கிறாள். வெளியே ஆண் தனக்கான உலகத்தை சமைத்துக் கொள்ளும்போது, அவளது உலகம் அவளுக்குள்ளேயே அடங்கி விடுகிறது. ஆனாலும் அவளுள் அடங்கிய உலகம் ஆண் சமைத்த வெளி உலகை விடப் பெரிதே. ஆனால் வெளி உலகின் கட்டுப்பாடுகள், கட்டுக்கோப்புகள் எல்லாம் பெண்ணைக் கற்பு எனும் வேலிக்குள் அடைத்து, அவளது தனி உலகை வெளியாரின் பார்வை படாமல் ஆக்கிவிடுகிறது.
அதனால் கண்ணனை மறக்காதிருந்தாலும், நெருங்க முடியாதிருப்போர் சிலர். சிலருக்கு தூங்கிவிட்ட ராதை ஓர் சமயத்தில் உள்ளே எழும் குழலிசையில் விழித்துக் கொள்கிறாள். அந்த ராதை சிறு குயிலின் இசைக்கும் நாட்டியமாடுகிறாள், மழையின் சிறுதுளிக்கு மயிர்க்கூச்செறிகிறாள், இயற்கையின் ஒவ்வொரு அசைவுக்கும் அழகுக்கும் மெய்ப்புக் கொள்கிறாள். நிரந்தரமாக அந்த மங்கைப் பருவத்திலேயே நின்றும் விடுகிறாள். ஆனால் இவையெதுவும் எவர் கண்ணுக்கும் புலப்படுவதில்லை. எந்தக் கணவனும் அந்த ராதையை அறிந்து கொள்வதில்லை. எந்தப் பெண்ணாலும் இதைத் தன் கணவனிடம் வெளிப்படுத்தவும் முடிவதில்லை. இதை உணர்ந்து, தெரிந்து கொள்ளும் ஒரே ஆண் கண்ணன் மட்டுமே. அவனால் மட்டுமே அந்த ராதையுடன் உரையாட, உறவாட முடிகிறது.
அவன் பாதங்களுக்கே சமர்ப்பணம் ராதையின் உள்ளம்....
No comments:
Post a Comment