Tuesday, April 19, 2022

ராதா ராணி

மனதை மயக்கும் மாலை நேரம். பிருந்தாவனத்தின் சோலையில் மெல்லிய தென்றலில் தவழ்ந்து வந்தது குழலிசை. அது அந்த மாயக் கண்ணனின் குழலிசையேதான். கொன்றை மரத்தின் வேரில் ஒரு கால் நீட்டி மறுகால் மடித்தமர்ந்திருந்தான் மாயன். இமைகள் சரிய மோனத்தில் மூழ்கியிருந்தான் அவன். 

அப்போது கால்களே நிலத்தில் பாவாமல் காற்றில் மிதப்பது போல் ராதை மெல்லடி வைத்து வந்து மரத்தின் பின்னால் மறைந்துகொண்டாள். சட்டெனக் குழலிசைப்பதை நிறுத்தியவன், "வா ராதா" என்றான். சிறு புன்னகையுடன் கண்ணன்அருகே வந்து அமர்ந்துகொண்டாள் ராதா. அவளைக் குறும்புடன் நோக்கி, “எனக்காக என்ன கொண்டுவந்தாய் ராதா?” என்றான். “நீயே பாரேன்" என கையிலிருந்த பொட்டலத்தை அவனிடம் நீட்டினாள். அதை வாங்கி அவிழ்த்தவன், “ஆகா இப்போதுதான் அவல் சாப்பிடடால் நன்றாக இருக்குமே என எண்ணினேன். என் மனமறிந்து கொண்டுவந்ததற்கு நன்றி” என்றான். சொன்னதையுணர்ந்து அவன் நிமிர்ந்து அவளைப் பார்ப்பதற்குள், உடைந்துபோய் கண்கலங்க அவனைப் பார்த்தாள். "என்னை வேற்றவள் ஆக்கிவிட் டாயல்லவா?" என்றது அந்தப் பார்வை.  வேகமாக எழுந்தவள் காற்றில் கரைந்து மறைந்துவிடடாள்.

அவள் காலடியைத் தொடர்ந்து சென்றான் கண்ணன். சுழித்தோடும் யமுனையாற்றின் கரையில் சிறுபாறையில் நீரலையை நோக்கியபடி அவன் வரும் காலடியோசையே காதில் விழாதவளாக அமர்ந்திருந்தாள் ராதை. அவள் காலடியில் சத்தமின்றிச் சென்றமர்ந்தான் கண்ணன். மெதுவாக அவள் பாதத்தைத் தொடடான். அவளோ ஏதுமறியாதவள் போல் சடடெனக் காலை இழுத்துக் கொண்டாள். அவனோ விடாக்கண்டனாக அவள் கால் விரல்களை இறுக்கப் பற்றிக் கொண்டான்.

இப்போது அவளால் காலை அசைக்க முடியவில்லை. இருந்தும் அவனைத் திரும்பிப் பாராமலேயே அமர்ந்திருந்தாள். “என் ராணிக்கு என்ன கோபம்?" என்றான் கண்ணன். “நீ என்ன நினைத்துக் கொண்டாய்? நடப்பதற்காக காலுக்கும், உன் குழலைப் இசைப்பதற்காக கைக்கும் நன்றி சொல்வாயா நீ?“ என்று அலைகளை பார்த்தபடியே கோபமாகக் கேட்டாள். “என் கண்மணியல்லவா, ஏதோ வாய்தவறி சொல்லிவிட்டேன் இந்த ஒரு தடவை மன்னித்துவிடக் கூடாதா?” என அவள் பாதங்களை வருடியபடியே கொஞ்சலாகக் கேடடான்.

ஒரக் கண்ணால் அவனைப் பார்த்தாள் ராதை. தலை குனிந்து அமர்ந்திருந்த அவன் தலையிலிருந்த பீலி அவளைப் பார்த்துக் கண் சிமிட்டியது. அவன் அமர்ந்திருந்த நிலை அவள் உள்ளத்தைக் கனியச் செய்தபோதும் பேசாமலேயே அமர்ந்திருந்தாள். அவள் கால்விரலில் சொடக்கெடுத்துக் கொண்டிருந்தான் அவன். அதற்குமேலும் பொறுக்க முடியாமல், “சரி எழுந்திரு கண்ணா. இனியொருமுறை இப்படிச் செய்தாயானால் நான் பொல்லாதவளாகிவிடுவேன்" என்றாள். 

“ஆமாம் இப்போது மட்டும் மிக நல்லவள் நீ" என சிறு சிரிப்புடன் முணுமுணுத்தபடியே எழுந்தான் கண்ணன். எழுந்து போகத் திரும்பியவள் சற்றே நின்று, “என்ன சொன்னாய் கண்ணா?” எனத் திரும்பிப் பார்த்தாள். “இல்லை உத்தரவு ராணி என்று சொன்னேன்" என்றான் கண்ணன் தலை குனிந்தபடியே. “ஞாபகம் இருக்கட்டும் கண்ணா. நாளை நீ அரசனாகலாம், மனைவிகள் பலர் வரலாம். ஆனால் நானே உன் ராணி" என மிடுக்குடன் மொழிந்தவள் காற்றில் மிதப்பவள்போல் சென்றாள்.

தென்றல் தேரிலேறி தன் உள்ளத்தின் ராணி செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தான் கண்ணன். தன் ஒட்டுமொத்த அன்பையே கிரீடமாக்கி அவளுக்கு சூட்டிவிடடான் அவன். அதனால்தான் இன்னும் அவள் ராதா ராணி என்றே வணங்கப் படுகிறாள்.

(இது வெறும் கற்பனை மட்டுமே...)

Saturday, April 16, 2022

உனக்காக..

அதிகாலை 

என் மனக்கதவு 

உனக்காய்த் திறந்துகொள்ள 

பன்னீரால் வாசல்தெளித்து 

விழிகளால் 

மலர்க்கோலமிட்டு அங்கே 

உனக்காய்க் காத்திருந்தேன்...


Sunday, April 3, 2022

அன்பின் வழி

பல தடுமாற்றங்கள் பயங்கள், அனைத்தையும் மீறி எதோ ஒன்று இதை எழுதிய ஆக்கவேண்டுமென்று உந்துகிறது. கொஞ்சம் கொஞ்சம் எஞ்சியிருந்த துணிவைத் திரட்டி இப் பதிவை எழுதத் தொடங்குகிறேன்  - அசட்டுத் துணிச்சல் தானோ….. இது எங்கே  எடுத்துச் செல்லப் போகிறதென்று நானறியேன்.

“காற்றின் குரல்” - நானாக அவனைத் தேடிச் செல்ல முடியாதபோது, காற்றாகி அவன் காதுகளை எட்டிவிட வேண்டுமென வைத்த பெயரது. ஆனால் அவனைத் தேடியே என் வரிகள் சென்றபோதிலும் அவன் என்னைக் கண்டுகொண்டான் என்றதும் நத்தையாகி என்னுள் ஒடுங்கிக் கொண்டேன். ஏன் இந்தத் தடுமாற்றம்? எங்கோ கண்ணுக்கெட்டிடாத தொலைவில் இருந்தபோதிலும் இன்னும் இன்னும் நெடுந்தொலைவு விலகி ஓடிச் சென்றுவிட விழைகிறது மனம். ஆனால் இன்னொருபுறம் அவனைச் சுற்றியே வட்டமிடும் சித்தம். இரண்டுக்குமிடையில் தடுமாறி நிற்கிறது நான் என்ற இன்னும் எதோ ஒன்று. 


குதித்தோடும் நதியாகவும் சிறகடிக்கும் படடாம்பூச்சியாகவும் என்னை உணர்ந்துகொள்ளும் நானே சமயங்களில் கூட்டுப் புழுவாகி எனக்குள் ஒடுங்கி கொள்கிறேன். அவ்வப்போது ஏதோ ஓர் அலை - எனக்குள் சிலிர்த்துப் போகிறேன். அவனுக்குள் நான் இருந்துகொண்டிருப்பதாக, எனக்குள் அவன் இருந்து நிகழ்த்திக் கொண்டிருப்பதாக ஏதேதோ எண்ணங்கள் - இதை வேறெவ்வாறு சொல்வதென்று தெரியவில்லை. 


ஆம் நான் கையில் அள்ளிய கடலின் துளி. அதை தொட்டு மகிழ, அதனுள் வானத்தைப் பார்த்து வானமே என்கையில் என மகிழ்ந்துகொள்ள முடிகிறது என்னால். இதை எந்த சூத்திரத்தாலும் விளக்க முடியுமென்று தோன்றவில்லை. சூத்திரங்களெல்லாம் ஆண்களுக்காக ஆண்களால் எழுதப்படடவை. ஒரு பெண்ணின் உள்ளத்தில் பொங்கிவழியும் அன்பை எந்தசூத்திரமும் வரையறுத்துக் கூறமுடியுமென்று தோன்றவில்லை. 


திருமந்திரம், பதஞ்சலி யோகசூத்திரம்… - இந்த சூத்திரங்களால் எனக்கு ஆகப்போவது ஒன்றுமில்லை. முதலில் அவை புரியப் போவதுமில்லை. பொருட்டாக இருப்பது ஒன்றே ஒன்றுதான் - அவற்றின் நாயகன் மட்டுமே. இது எப்போதும் நடந்தே வந்திருக்கிறது. சத்சங்கங்கள் சென்றபோதும் அங்கே எதுவும் புரிந்ததில்லை. இன்றோ எங்கும் செல்லாதபோதும் கண்ணன் குரல் எப்போதும் காதில் ஒலித்து என்னை வழிநடத்திச் செல்கிறது.


அவன் என்னுளிருந்து அனைத்தையும் நிகழ்த்திக் கொண்டிருக்கிறான். எனக்குள் இருந்து அவன் பொழியும் அன்பே என்னைச் சூழ நிறைந்திருக்கிறது. அவனது வரையறையற்ற அன்பே என் இதயத்தை நிறைத்து பொங்கி வழிகின்றது. அவன் அன்பே என் முன்னால் வழிநிறைத்து விரிந்து கிடக்கிறது. அவனது அன்பு இட்ட பாதையில் பாதங்கள் நோகாது, பாதையை நோக்காது பயணிக்க ஆரம்பிக்கிறேன். அவன் அன்பே வழிநடத்தட்டும் இவளை...

முழுமை

என்றும்போல் அந்தப் பௌர்ணமி முழுநிலவு  என்னுள் ஏக்கங்களை விதைக்க  தீராத உன் நினைவுகளுடன்  போராடிக்கொண்டு நான்... எதை மறப்பினும் உனை மறவேனென  ...