Friday, February 18, 2022

கண்ணனும் ராதையும்

கண்ணன் - ராதை என்பது காதலின் குறியீடாகவும் பக்தியின் குறியீடாகவும் பார்க்கப்படும் ஒன்று. ராதை என்பவள் கோபிகைகளில் ஒருத்தி என்றும் கண்ணனின் தனிப்படட அன்பிற்குப் பாத்திரமானவள் என்பதும் கூட  பெரும்பாலும் அறியப்பட்ட விடயமே. இதில் கண்ணனும் ராதையும் ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை என்பதைப் பற்றி பலவித கருத்துக்களும் வாதப் பிரதிவாதங்களும் இடம்பெற்றுக்கொண்டே இருக்கின்றன.


ராதையும் கண்ணனும் வேறல்ல இருவரும் ஒருவரே. ஒருவர் தன்னைத்தானே எவ்வாறு மணக்க முடியும்? என்பது பரவலாக உலா வரும் கருத்து. ராதை என்பவள் லடசுமியின் வடிவம், அதனால்தான் கண்ணன் லடசுமியின் இன்னொரு வடிவமான ருக்மணியை மணந்து கொண்டான் என்றும் சொல்லப்படுகிறது (அதற்கு, ஒரு வடிவத்தை விடுத்து இன்னொரு வடிவத்தை மணப்பானேன் என்ற கேள்வியையும் எழுப்பமுடியும்).


எனக்கு கொஞ்சம் ஏற்றுக்கொள்ளும்படி தோன்றிய ஒரு கருத்து, கண்ணனும் ராதையும் அன்பைப் பரிமாறிக் கொண்டார்கள். ஆனால் அதற்கு அவர்கள் எந்தவித label உம் கொடுக்க விரும்பவில்லை. அதாவது அந்த அன்பை ஒரு குறிப்பிட்ட உறவுக்குள் அடைத்து அதற்கு ஒரு வரையறை கொடுக்க விரும்பவில்லை. அதனாலேயே அவர்கள் மணம் செய்து கொள்ளவில்லை. இது கொஞ்சம் எனக்கு பிடித்திருந்த காரணம், கண்ணன் என்பது ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான அவதாரமாக கொள்ளப்படுகிறது. ஒரு புரட்சி என்பதும் புதிய யுகத்திற்கான ஆரம்பம் என்பதும் அங்கிருந்து தொடங்குகிறது. பெண் விடுதலைக்கான அத்திவாரம் பாரதியார் இட்டது என்பார்கள். அந்த அத்திவாரத்துக்கு மண்ணெடுத்தவன் கண்ணன். பெண்ணை அவளது பலம் மற்றும் பலவீனத்தோடு நேசித்தவன்.


பெண்ணை பூமாதேவியாகப் பார்க்கிறோம் தெய்வமாகப் பார்க்கிறோம் தாயாக பூஜிக்கிறோம் என்னும் ஆண்களுக்கு பெண்ணை ஒரு பெண்ணாக, ஒரு சக உயிராகப் பார்க்க முடிவதேயில்லை. அவளை ஒரு உறவென்ற சிறைக்குள் அடக்காமல் அவளுடன் பழக சாதாரணமாக ஆண்களால் முடிவதில்லை. அந்த வரையறைகளைக் கடந்து, வீட்டுச் சிறைக்குள் பெண்கள் இருந்த காலத்திலேயே அவர்களுடன் வரையறையின்றி ஆடிப்பாட முடிந்தது கண்ணனால். உற்ற தோழனாக தன்னைச் சூழ இருந்த பெண்களைப் புரிந்துகொண்டு பழக அவனால் மட்டுமே முடிந்தது. இதனால்தான் அந்த இறுதிக் காரணம் சற்று ஏற்றுக் கொள்ளும்படி இருக்கிறது எனக்கு. 


ஆனால் இதைவிடவும், ராதை என்ற ஒருத்தி கிடையவே கிடையாது. அது பிற்காலத்தில் கண்ணனின் லீலைகளைப் பாடிய கவிகள் செய்த சில்மிஷம் என்று கூறுவாரும் உண்டு. அது கூட ஒரு வகையில் உண்மையாக இருக்கலாம். இது எனது புரிதல். ராதை என்பது கோபிகைகளில் பொதுவாக வழங்கப்பட்ட ஒரு பெயர். அதற்கு அன்பின் தெய்வம் என்ற பொருளும் கூறப்படுகிறது. அது பின்னாளில் சேர்க்கப்பட்ட அர்த்தமாகக் கூட இருக்கலாம். அதை ஒரு ஓரமாக வைத்துவிடலாம். கண்ணன் அந்த கோபிகைகள்மீது வைத்த வரையறையற்ற அன்பே ராதை என எடுத்துக் கொள்ளலாம். அப்படிப் பார்க்கப்போனால் கண்ணனின் அன்பிற்குப் பாத்திரமான, அவன்மீது வரையறையின்றி அன்பைப் பொழிந்த அனைத்துப் பெண்களுமே ராதைத்தான்.


இன்றும்கூட பெண்கள் தம் அன்பிற்குப் பாத்திரமான எந்த ஆணை விளிக்கும்போதும் - அது குழந்தையோ காதலனோ - கண்ணா என்றே அழைக்கிறார்கள். அந்தக் கண்ணன்போல இவர்களும் தங்களைப் புரிந்துகொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்புதான் போலும். அல்லது அப்படி அன்பைப் பரிமாறிக்கொள்ளும்போது அனைவருமே கண்ணன், ராதையாக மாறிவிடுகிறார்கள் போலும். இங்கு கண்ணனோ ராதையோ அல்ல அந்த வரையறையற்ற அன்பே பேசுபொருளாக இருக்கிறது. அதைப் பேச வார்த்தைகளின்றி கண்ணன், ராதை என ஏதேதோ பிதற்றிக்கொண்டிருக்கிறோம்.


Thursday, February 17, 2022

கண்ணன் யார்?

கண்ணன் வெறும் கதையல்ல 

வெறும் கற்பனையும் அல்ல…

ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்வாழ்ந்த 

வெறும் ஒரு மனிதனுமல்ல 

ஆனால் இதிகாச புராணங்களின் நாயகனுமல்ல 

கண்ணன் ஒரு நிகழ்வு…

யுகம்தோறும் யுகம்தோறும் நிகழும் நிகழ்வு அவன் 

கணம்தோறும் நிகழும் நிகழ்வு கண்ணன் 

அவன் நிகழவேண்டுமானால் வேண்டுவது 

நம்மில் ஒரு மீராவோ அல்லது ராதையோ..

அது ஆணாயினும் பெண்ணாயினும்

பொருட்டல்ல அவனுக்கு...

ஆண்களில் ராதையே அர்ஜுனன் 

அவன் ஒருவனே ஆண் 

Wednesday, February 16, 2022

கண்ணனின் இதயம்

எப்போதும் போல கனவுக்கும் நினைவிற்கும் நடுவில் அலைபாய்ந்த ஒரு கற்பனை. வாழ்க்கை என்பதே பாதி நினைவுகளும் நிறைவேறாத கற்பனைகளின் ஏக்கங்களும்தானே... இதுவும் ஒரு ஆழ்மன உணர்வைத் தொடர்ந்து எழுந்த நினைவுதான். 

கண்ணனைப் பார்க்கச் செல்கிறேன். அதே கண்ணன்தான் ஆனால் தாடியுடன்.. அவனருகில் செல்கிறேன். “எங்கே வந்தாய்?” என்றான் நிமிர்ந்து பார்த்து. நான் எங்கெங்கோ இருந்தபோது மிக  அருகில் என்னுடன் இருந்த கண்ணன், அருகில் நெருங்கி எதிரே நின்றபோது எங்கோ நெடுந்தொலைவு சென்றுவிட்ட்தாக உணர்ந்தேன். வேற்று மனிதரைப் பார்ப்பது போன்ற வெற்றுப் பார்வையுடன் அவன் கேட்ட கேள்வி எங்கோ நெடுந்தொலைவு கடந்துவந்து உள்ளத்தை ஊடுருவ, தாங்க முடியாது கால்கள் தளர்ந்து அங்கேயே அமர்ந்து விட்டேன்.


நீண்ட நெடுங்காலம் போல் தோன்றிய சில நிமிடங்களோ அல்லது நொடிகளோ கடந்து தன்னுணர்வு வந்தபோது, உள்ளே “கண்ணா கண்ணா” என மனம் கதறிக் கொண்டிருந்தது. அப்போதுதான் அவன் கேட்ட கேள்வி புரிய, தடுமாற்றத்துடன் “உ.. உங்களைப் பார்க்கத்தான் வந்தேன்” என்றேன். “ம்” என்ற ஒற்றைச் சொல்லே பதிலாக வந்தது. நான் ஒருத்தி இருப்பதையே அறியாதவனாக தனது காரியத்தில் மூழ்கிவிட்டான். கண்ணனைக் காண என ஆவலுடன் வந்தவள் முழுவதுமாக உடைந்துவிட, மெதுவாக என்னைத் திரட்டி எழுந்து நின்றேன். 


முழுவதும் உள்ளே கரைந்துவிட்ட  குரலை மீட்டெடுத்து, வேண்டுமென்றே “நான் போகிறேன்” என்ற வார்த்தையுடன் நானும் சற்று மீண்டேன். இப்படியே போய்விடுகிறேன் என மனதுக்குள் சொல்லிக் கொண்டேன். திரும்பி சில அடிகள் நடந்தவள் ஏதோ அசைவை உணர்ந்து சற்றே திரும்பிப் பார்த்தேன். கண்ணனும் பின்னால் வந்து நின்றான். திரும்பி அவனிடம் ஓடிவிட அழுது அடம்பிடித்த மனதை அடக்கி மேலும் சில அடிகள் வைத்தேன். மீண்டும் பின்னால் அவன் வரும் அசைவை உணர்ந்து மனம் அசையாது நின்றுவிட, கால்களும் அசைய மறுத்து நின்றுவிட்டன. 


“எங்கே போகிறாய்?” என்றான். “தெரியாது” என்றேன் நான். “தெரியாமல் எங்கே போவாய்?” என்றான். “தெரியாமல் தானே வந்தேன். தெரியாமலேயே போய் விடுகிறேன்” என்றேன் அழுத்தத்துடன். “இந்தத் திமிர் இன்னும் போகவில்லையடி உனக்கு” என்று சிரித்தான். இன்னும் அவன் முகத்தை ஏறெடுத்துப் பார்க்கும் தைரியமின்றி எங்கோ பார்த்தபடி, “எல்லாமே கண்ணன் கொடுத்ததுதான். போகாது” என்றேன். மேலும், “வந்தபோது பேசாதிருந்து விட்டு இப்போது எதற்கு பின்னால் வருகிறாய் கண்ணா?” என்றேன். “நீயாக வந்தாய். என்னை அழைக்காமல் நீயே கிளம்பி விட்டாயே ராதா” என்றான்.


அவனது குரலின் வம்பிழுக்கும் தொனியிலும், ராதை என்ற அழைப்பிலும் என்னையறியாது திரும்பி, அவன் பார்வையை நேரடியாகவே சந்தித்து விட்டேன். குறும்புச் சிரிப்பும் கனிவும் நிறைந்த அதே கண்கள், அந்தப் பார்வையில் உருகி வழிந்து ஆறாகி, ஓடிச் சென்று அவன் கால்களைத் தழுவிக் கொண்டேன். கால்களை நனைத்த நதியை கையில் அள்ளி அவன் பருக, அவனுள் கலந்து நிறைந்தேன்…


"உயித் தீயினிலே வளர் ஜோதியே

எந்தன் சிந்தனையே எந்தன் சித்தமே..."


முழுமை

என்றும்போல் அந்தப் பௌர்ணமி முழுநிலவு  என்னுள் ஏக்கங்களை விதைக்க  தீராத உன் நினைவுகளுடன்  போராடிக்கொண்டு நான்... எதை மறப்பினும் உனை மறவேனென  ...