கன்னிப் பெண்கள் கூட்டம்"
கவிஞர் கண்ணதாசனின் வரிகள். அழகிய காதல் பாடலாக அநேகமாக அனைவரும் அறிந்தது. இதுநாள்வரை அவ்வாறே நானும் ரசித்த பாடல் - என் உள்ளத்திற்கு மிக நெருங்கிய பாடல். இப்போது வேறொரு கோணத்தில் நினைக்கத் தோன்றியது… எனக்கு எல்லாமாகவும் - உயிர்த் தோழனாக, வழிகாட்டியாக எல்லாவற்றுக்கும் மேல் குருவாக - இருந்தவன் இன்னும் இருந்துகொண்டிருப்பவன் கண்ணன். இன்றோ இன்னும் ஒருபடி மேல் அவன் என் இறைவன். இனம்புரியாத ஓர் உணர்வுடன் மனதை நெருடிக்கொண்டிருக்கிறது இன்று இந்தப்பாடல்.
இது குரு - சிஷ்யன் உறவைப்பற்றிச் சொல்வதாக ஏனோ இப்போது தோன்றுகிறது.ஒருவேளை கிருஷ்ண பக்தரான கண்ணதாசனும இவ்வாறான அர்த்தத்திலேயே எழுதியிருக்கவும் கூடும்.
“கங்கைக் கரைத் தோட்டம்
கன்னிப் பெண்கள் கூட்டம்
கண்ணன் நடுவினிலே…”
கண்ணன் எப்போதும் பெண்களுக்கு மிக நெருங்கிய தோழனே. பெண்கள் மன உணர்வைப் புரிந்துகொண்டவன் கண்ணன் ஒருவனே. அவ்வாறிருக்க பெண்கள் அவனைச் சூழ்ந்திருப்பதில் அதிசயமென்ன.
அத்துடன் இந்தப் பாடல் பள்ளிப் பருவத்தில் படித்த மாணிக்கவாசகரின் கதையோடு தொடபுள்ளதாக - அல்லது அதே கதையாகக்கூட - தோன்றுகிறது. கண்ணனுக்கும் மணிவாசகருக்கும் என்ன சம்பந்தம் என்று தோன்றும். இது கண்ணன் - மணிவாசகர் பற்றியதல்ல, குரு - சிஷ்யன் பற்றியது, அல்லது இறைவன் - பக்தன் பற்றியது, ஏனெனில் சமயங்களில் குருவும் இறைவனும் ஒன்றேயாவதும் உண்டு.
அடுத்த வரிகள்,
“காலையிளம் காற்று பாடிவரும் பாட்டு
எதிலும் அவன் குரலே..”
அதிலென்ன இருக்கிறது, காதலிக்கும் பெண்ணுக்கு காதலன் குரலே எங்கும் கேட்பதாக தோன்றுவது இயல்புதானே… அது மட்டுமல்ல சிஷ்யனுக்கு கூட குருவின் குரல் கேட்பதாக தோன்றுவதும் இயல்புதான். என் குருநாதர் சொன்னதுண்டு குரு - சிஷ்யனுக்கு இடையில் இருப்பதுதான் மிக நெருக்கமான ஒரு காதல் (ultimate love - அதுதான் அவர் சொன்னது) என்று. அங்கு உடலின் தடைகள் கிடையாது. ஆத்மார்த்தமான உறவு அது. எல்லைகளைக் கடந்தது.
இங்குதான் மணிவாசகர் குருநாதராக வந்த சிவனை சந்தித்த கதை ஒத்துப் போகிறது. திருப்பெருந்துறை வரும் வாதவூரர் சிவனடியார் முழக்கம் கேட்டு அந்த இடம் நோக்கி தன்னையறியாது செல்கிறார். அங்கு அடியார் புடைசூழ அமர்ந்து அவர்களுக்கு உபதேசமாளித்துக் கொண்டிருந்த குருநாதரைக் காண்கிறார்.
ஆனால் நம் கண்ணன் அமர்ந்திருப்பது பெண்கள் புடைசூழ அல்லவா என்றால், பக்தி முற்றிவிடும்போது ஆணும் பெண்ணாகிறான். அதாவது ஆணுக்குள் இருக்கும் பெண்மை (femininity அல்லது feminine தன்மை) வெளிப்படுகிறது.ஏனெனில் அங்கு இறைவன் மட்டுமே ஒரே ஒரு ஆணாக ஏற்கப்படுகிறான். அதனால்தான் திருநாவுக்கரசரும் “முன்னம் அவனுடைய நாமம் கேடடாள்” என தன்னைப் பெண்ணாக உருவகித்துப் பாடியிருப்பார்.
குருநாதரைக் கண்டவுடன்,
“கண்ணன் முகத் தோற்றம் கண்டேன்
கண்டவுடன் மாற்றம் கொண்டேன்
கண்மயங்கி ஏங்கி நின்றேன்
கன்னி சிலையாகி நின்றேன்
என்ன நினைந்தேனோ தன்னை மறந்தேனோ
கண்ணீர் பெருகியதே”
அப்படியே மாணிக்கவாசகருக்கு கொடுத்த வர்ணனையாகவே நினைக்கத் தோன்றுகிறது. அதுதான் கவிஞர் கண்ணதாசனுக்கு ஏற்படட உணர்வுபோலும். ஆண் பெண் கடந்த ஒருவித ஈர்ப்பு.
“கண்ணன் என்னைக் கண்டுகொண்டான்
கையிரண்டில் அள்ளிக் கொண்டான்
பொன்னழகு மேனி என்றான்
பூச்சரங்கள் சூட்டித் தந்தான்”
அழகான வரிகள். எந்தப் பெண்ணும் தன் காதலனைப் பற்றிக் கண்டிருக்கும் கனவு அல்லது கற்பனை. அத்துடன் குரு சிஷ்யனை ஏற்றுக்கொள்ளும் சந்தர்ப்பமாகவும் எடுத்துக் கொள்ளலாம். ஏனெனில் இதை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன். எழுதிய காரணம்தான் கவிஞர் பெயரிலேயே உள்ளதே.
“கண் திறந்து பார்த்தேன் கண்ணன் அங்கு இல்லை
கண்ணீர் பெருகியதே….”
இது காத்திருப்பு. காதலனோ - குருவோ யாருக்காக இருப்பினும் காத்திருப்பு ஒன்றே.
“கண்ணன் முகம் கண்ட கண்கள்
மன்னர் முகம் காண்பதில்லை
கண்ணனுக்குத் தந்த உள்ளம்
இன்னொருவர் கொள்வதில்லை”
கண்ணனை நேசித்த மனம் அதன்பின் மன்னவரேயானாலும் அவரைக் கண்ணெடுத்தும் பார்ப்பதில்லை என வைராக்கியம் கொள்கிறது. “இச்சுவை தவிர யான்போய் இந்திரலோகமாளும் அச்சுவை பெறினும் வேண்டேன்” என்ற தொண்டரடிப் பொடியாழ்வாரின் வைராக்கியம் அது. நாவுக்கரசர் “நாமார்க்கும் குடியல்லோம்” என்று சொன்னதில் உள்ள உறுதியை இது பிரதிபலிக்கிறது.
இதேபோல் மணிவாசகரும் அவரை நகருக்கு வரும்படி கூறிய அரசாணையைக் கேட்ட்தும் அவர் “குருநாதர் முகம் பார்த்தபின் எந்த முகத்தையும் பாரேன்” என மறுக்கிறார்.
அதற்கு அடுத்த வரி “கண்ணனுக்குத் தந்த உள்ளம் இன்னொருவர் கொள்வதில்லை” - குருநாதர் ஒருவரைத் தஞ்சமடைந்தபின் வேறெதுவும் பொருட்டல்ல என்ற பொருளிலும் எடுத்துக் கொள்ளலாம். ஒருத்தி கண்ணனுக்கென்றே தன்னை முழுவதுமாகக் கொடுத்தபின் அவளிடம் வேறெதுவும் எஞ்சப்போவதில்லையே…
“கண்ணன் வரும் நாளில் கன்னியிருப்பேனோ
காற்றில் மறைவேனோ…”
எவ்வளவு காலம்தான் கண்ணனுக்காக காத்திருப்பதோ என்ற ஏக்கம். அந்த ஏக்கத்திலேயே கரைந்துபோய்விடுவேனோ என்ற உருக்கம். இருந்தபோதிலும்,
“நாடிவரும் கண்ணன் கோலமணி மார்பில்
நானே தவழ்ந்திருப்பேன்…”
அப்படியே காற்றில் கரைந்தாலும் கண்ணனுடன் கலந்துவிடுவேன் என்கிறாள். அதுவே பக்தியின் நிறைவு - பக்தன் இறைவனாகவே ஆகிவிடுவது. இங்கு அருணகிரிநாதரின் வாக்கையே என் லட்சியமாகக் கொண்டுவிடடேன்...
"யானாகிய என்னைவிழுங்கி வெறும்
தானாய் நிலைநின்றது தற்பரமே"
No comments:
Post a Comment